Saturday, April 18, 2015

தமிழாின் உலோக அறிவியல் -நன்றி தினமணி



clip

Sunday, March 22, 2015

உங்கள் சிகிச்சை, உங்கள் கையில்!

உங்கள் சிகிச்சை, உங்கள் கையில்!

By -சாருகேசி 
சென்னை அடையாறு வி.ஹெச்.எஸ்.மருத்துவமனையின் டேக்-வி.ஹெச்.எஸ். டயாபடிக் மையத்தில் புகழ் பெற்ற மருத்துவர் டாக்டர் சி.வி. கிருஷ்ணசாமி, சீனாவிலிருந்து வந்திருக்கும் ஹோங்க்சி ஸியோவை நமக்கு அறிமுகப்படுத்தினார். 
""இவர் முதலீட்டுத் துறையில் அனுபவமுள்ள முன்னாள் வங்கி அதிகாரி.  எம்.பி.ஏ. பட்டதாரி. ஒரு நாவலும் எழுதி சீன சமுதாயத்தினரிடையே விற்பனையில் அது சக்கைப் போடு போடுகிறது.  இப்போது ஸியோ இங்கே வந்திருப்பது மாற்று மருத்துவம் பற்றியும் அதன் பலனையும் எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்தத்தான்'' என்றார்.  முன்பே இரு முறை சென்னைக்கு வந்திருக்கிறாராம் ஸியோ.  சீனாவின் ஹூபே மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அந்தப் பகுதி முழுக்க மலைப் பிரதேசமாம். அங்கே பாரம்பரிய சீன சிகிச்சை முறைகளைக் கையாளுபவர்கள் நிறைய இருக்கிறார்கள் .
நாம் ஸியோவைச் சந்திக்கும்போது அவருடன் பயிற்சிகளைச் செய்து காண்பிக்க பிங், எல்லென் மற்றும் டோங்லி என மூன்று சீன உதவியாளர்களும் இருந்தார்கள்.  அவருடன் பேசும் முன்பு ஹாங்காங்கிலிருந்து மும்பைக்குக் குடிபெயர்ந்துவிட்ட மராத்தி பிஸினஸ்மேன் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார் பராக் சாமெல்.
""எனக்கு ஹாங்காங்கில் பல கப்பல்களை மேற்பார்வையிட வேண்டிய பணி.  ஒரு நாள் வலது கண்ணில் ரெடினாவுக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, கண் முழுக்கச் சிவந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது.  என்னவெல்லாமோ வைத்தியம் செய்து பார்த்தேன்.  12  வருடங்கள் பாதிப் பார்வையுடன் கஷ்டப்பட்டேன்.  ஒரு நாள் ஸியோவின் அறிமுகம் கிடைத்தது.  அவர் பைதா-லாஜின் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி என் கண்ணைக் குணப்படுத்திவிட்டார். க்ரேனியல் நரம்புதான் பார்வைக்கு உதவுகிறது என்றார்.  அதுதான் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.   மாய வித்தை போல் இருந்தது.  அவரிடம் அந்த சிகிச்சை முறையைக் கற்றுக்கொண்டேன். அதிலிருந்து நான் மும்பைக்குக் குடி பெயர்ந்து பைதா-லாஜின் ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்துகிறேன்'' என்றபோது ஸியோ மெல்லப் புன்னகை புந்தார்.
""இதோ பாருங்கள், என் சொந்த அனுபவம்தான் என்னை இந்தச் சிகிச்சைக்கு மாற்றியது.   தாயார் இதய நோயாளி. அதிக ரத்த அழுத்தக்காரர். சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளானவர்.  அவரே 30 வருடங்களாக ஆங்கில மருத்துவம் செய்யும் மருத்துவர்.  அம்மா, நீயே ஒரு டாக்டர்.  உனக்கு இத்தனை நோய்கள் இருக்கையில் நீயே உன்னைக் குணப்படுத்திக் கொள்ள முடியாதா என்று கேட்டேன்.  அம்மா மிகவும் கஷ்டப்பட்டார்.  அவருக்கு பைதா-லாஜின் முறையில் சிகிச்சை ஆரம்பித்தேன்.  முழுதும் குணமாகி மகிழ்ச்சி அடைந்தார்'' என்றார் ஹோங்க்சி ஸியோ.
இன்னொரு பெண்மணியின் கதையைக் கேளுங்கள்.  பக்கவாதம் வந்தோடு மட்டுமல்ல.  நடக்க முடியாது.  நினைவு இழந்து படுத்திருந்தார். கண்கள் இரண்டும் ரத்தம்
சேர்ந்த மாதிரி சிவந்து இருந்தன.  நான் அவரைப் பார்த்து பைதா-லாஜின்  (Paida lajin) முறையைக் கையாண்ட போது, 15 நிமிடத்தில் விழித்துக் கொண்டார் அப்புறம் ஏழே நாள்தான் சிகிச்சை கொடுத்தேன். வீட்டுக்கு நடந்தே போய்விட்டார்'' என்றார் ஸியோ. பைதா-லாஜின் சிகிச்சை முறை என்றால் என்ன?
 
""ஸ்லாப்பிங் அன்ட் ஸ்ட்ரெச்சிங் - அதாவது அடித்தல் மற்றும் நீட்டல்  (அடித்தல் என்றால் தட்டுதல், ஓங்கித் தட்டுதல்) 
நம் உடம்பில் இதயம் துடிப்பதை மட்டும்தான் நாம் அறிகிறோம்.  உடம்பின் முக்கியமான பகுதிகள் அத்தனையும் துடிக்கும்.  அந்தத் துடிப்பை, வைப்ரேஷனை நாம் கேட்க முடியும்.  அந்த ஓசைகள் எல்லாம் ஒத்திசைந்து செயல்படும்போது உடல் சீராக இருக்கிறது.  ஒரு பகுதி சரியாக இயங்கவில்லை என்றாலும் நோய் தாக்குகிறது.  அதனால் மருந்துகள் சாப்பிடச் சொல்கிறார் மருத்துவர்.  மருந்துகள் எல்லாம் கெமிக்கல்கள். அதாவது ரசாயனங்கள்.  விஷங்கள். பக்கவிளைவுகள் ஏற்படுத்துபவை.  உடலுக்கு வெளியே இருந்து எதையும் உடலுக்குள் செலுத்தாதீர்கள்.  அக்குபங்க்சர், அக்குபிரஷர், டாய்-சி, யோகா இவற்றைக் கொண்டே உங்கள் உடலின் சகல நோய்களையும் சீராக்க முடியும்'' என்கிறார் ஸியோ. மூலிகை மருந்துகள் உபயோகிப்பதை இவர் ஆதரிக்கிறார்.   சீன மருத்துவத்தைப் பொறுத்தவரை, சீன மருத்துவ நூல் யெல்லோ எம்பரர்ஸ் கானன் ஆப் இன்டர்னல் மெடிசின் அவர்களுக்கு பைபிள் மாதிரி.
""பொருளாதாரம் படித்து, எம்பிஏ வாங்கிவிட்டு, வங்கியில் இன்வெஸ்ட்மென்ட் பாங்கராகச் இருந்து சம்பாதித்துவிட்டு, வாழ்க்கையை நான் அனுபவிக்கவில்லை என்றால் அப்புறம் வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றியது.  சீன கலாசாரம் பற்றி யோசித்தேன்.  பீஜிங்கில் ஒலிம்பிக்ஸ் நடக்கும் முன்பு சீன பாரம்பரியம், கலாசாரம் பற்றி தொடக்க விழாவில் என் குழு ஓர் அறிமுகம் செய்தது.  ஒலிம்பிக்ஸின்போது இதை உலகம் முழுக்க வியந்து பார்த்த போது அதன் தாக்கத்தை உணர்ந்தேன்.  அப்போதுதான் சீன மருத்துவத்தின் தலைசிறந்த மருத்துவர்களை நான் சந்திக்க முடிந்தது. அவர்களிடமிருந்து அக்குபஞ்சர், அக்குபிரஷர், போன் செட்டிங், ஊசியின்-கத்தியின் நுட்பம், பைதா-லாஜின் முறை எல்லாம் கற்றுக்கொண்டேன்.  நாம்தான் நம் ஆரோக்கியத்தின் எசமானர்கள்'' என்கிறார் ஸியோ.
இவர் முதலில் எழுதிய நூல் "ஜர்னி டு க்யூர்' - மற்றும் "பைதா-லாஜின் ஸ்லாப் ஹீலிங்'.  இவர் இப்போது உலகம் முழுக்கச் சொற்பொழிவுகள் செய்யக் கிளம்பிவிட்டார்.
சந்தேக பிராணிகளிடமும், சவால்காரர்களிடமும் இவர் கேட்கும் முதல் கேள்வி: ""நீங்கள் பைதா-லாஜின் உங்கள் அளவில் பயிற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?  செய்து பார்த்துவிட்டுத் தோற்றுப் போனால் வந்து சொல்லுங்கள்'' என்பது இவர் வேண்டுகோள். பைதா முறையை ஒரு தாவோ சன்னியாசியிடமிருந்தும், லாஜின் முறையை ஒரு
சீன-மருத்துவ நிபுணரிடமிருந்தும் கற்றுக்கொண்டாராம். இவர் அகுபங்க்சர் கற்றுக்கொண்டது ஒரு என்ஜினீயரிடமிருந்து.  அக்குபிரஷரை ஒரு மீனவரிடமிருந்து கற்றுக் கொண்டாராம்   கை, முழங்கை, முழங்கால் மற்றும் பாதம் இவைதான் நம் உடம்பில் முக்கியமான இணைப்புகள்.  அடைப்புகள் இருந்தால் இந்த இடங்களில் ஒரு தட்டுத் தட்டினால் போதும் வலி போய்விடும்.  நிறைய அடைப்புகள் இருந்தால் நிறைய தடவை தட்ட வேண்டும்.  (பிறத்தியாரை அடித்தால்தான் திரும்ப அடி வாங்க வேண்டும்.
நோய் குணமாகுமென்றால் நம்மை நாமே அடித்துக் கொண்டால் என்ன தப்பு)  எந்தப் பக்க விளைவுகளும் கிடையாது. உடல் பருமனைக்கூட பைதா-லாஜின் முறையில் குணப்படுத்த முடியும் என்கிறார் ஸியோ.  டயபடீஸ்,  முழங்கால் வலி, இடுப்பு-முதுகு வலி எதையும் தம்மால் பைதா-லாஜின் முறையில் குணமாக்க முடியும் என்கிறார். 
நம்மைக் குணப்படுத்த வெளியேயிருந்து ஆட்கள் வரத் தேவையில்லை என்பது இவர் வாதம்.  நவீன மருத்துவத்தை விட இந்த இயற்கை மருத்துவம் எத்தனையோ சக்தி வாய்ந்தது என்கிறார்.
45 வயதான ஒரு பெண்மணி படுத்த படுக்கையாக இருந்தாராம்.  நாள் பூரா ஒரே அழுகைதான்.  14 ஸ்ட்ரெச்சஸ் பயிற்சிகள், 15 ஸ்லாப்-கள் அதாவது அடிகள்!  எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டாராம்.  85 சதவிகித குணம் கிடைத்ததாம். ஒவ்வொரு நோயையும் அதைத் தாம் குணப்படுத்திய முறையையும் ஸியோ விவரிக்கும் முறை சுவாரசியமானது.
பேட்டி முடிந்து வெளியே வந்ததும், டாக்டர் சி.வி. கிருஷ்ணசாமி கூறினார்.
"" ஸியோ மகாத்மா காந்தி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.  அவரே அதைச் சொன்னார். அப்புறம் அவர் கடைப்பிடித்த உண்ணாவிரதக் கொள்கையை வெகுவாக ஆதரிக்கிறார்.  அது உடலை நலமாக வைத்திருக்க உதவுகிறது என்கிறார்''  டாக்டர் சி.வி.கே.  மணிபால் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மாற்று மருத்துவ ஆர்வலருமான டாக்டர் பி.எம். ஹெக்டே ஸியோவின் ஆதரவாளர். 

நன்றி தினமணி 22.03.15


Saturday, November 8, 2014



ஆவுடையாா் கோவில்   
ஆவுடையாா் கோவில் தமிழகத்தில் புதுக்கோட்டைக்கு அருகில்  உள்ளது.  மிக அற்புதமான கோவில், தமிழா்களின் கலை, அறிவியல், சிற்ப திறன் மற்றும் ஓவிய திறமைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு இக்கோவில் ஆகும்.

இக்கோவிலை பற்றி சொல்லுவதை விட நோில் சென்று பாா்த்தால் தான் அதன் அற்புதம் தொிய வரும் என்பது  என் கருத்து.

சிறப்பு
1) மற்ற கோவில் போல் இங்கு பூசைகள் நடைபெறுவதில்லை.  இங்கு தனி முறை பின்பற்ற படுகிறது.
2) பக்த்தனான மாணிக்கவாசகருக்கு இங்கு முதல் பூசை நடைபெறுகிறது.
3) சிற்பங்கள் யாவும் இதுபோல் மேற்கொள்ள முடியாது என சத்தியமிட்டு கூறலாம்.
4) பழைய கால ஓவிங்கள்
5) குதிரை சாமி
6) குறவன், குறத்தி சிற்பங்கள்
7) கற்கள், தகடுபோல் வளைந்து செதுக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு
8) கோவிலுக்குள் உள்ள கிணறு





























Thursday, March 8, 2012

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் -அத்திமரம்





அத்திமரம்

மரங்களில் திருக்குர் ஆன், பைபிள், வேதங்கள் ஆகிய மூன்றிலும் இடம் பெற்ற ஒரே மரம் அத்தியாகும். இந்த மரம் வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.இந்த கிரகத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுகள் அதிக அளவில் வெளியேறுகிறது. அதனால்தான், வெள்ளி கிரகத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிறந்தது. இந்த நாள் அன்று முஸ்லீம்கள் விசேஷ தொழுகை நடத்துவார்கள். கிறிஸ்தவர்களுக்கு குட் ஃபிரைடே என்கிற புனித வெள்ளிக்கிழமை விரதம் இருந்து விசேஷ பூஜைகளும் செய்வார்கள்.

இந்தக் கிரகம் மனித உடலில் கழுத்து பாகத்தை மிகவும் பாதிக்கச் செய்கிறது. மலச்சிக்கல், வீக்கம், சிறுநீரகக் கோளாறுகள், குடல்புழுக்கள், வெள்ளி கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால்தான் உருவாகின்றன. மனிதனுக்குப் பல வகையான நோய்கள் ஏற்படும் போது கிராம மக்கள் அவற்றில் சிலவற்றை வெள்ளி தோஷம் என்பார்கள். அதாவது வெள்ளி கிரகத்தின் தீய கதிர்வீச்சுளால் ஏற்பட்ட நோய்கள் என்று பொருள் கூறுவர்.அதற்காக இந்து சமுதாய மக்கள் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று வெள்ளி கிரக விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகிலுள்ள அத்தி மரத்தையும் தொட்டு வணங்கிவிட்டு வெள்ளி கிரகத் தோஷத்தைக் கழிப்பார்கள். வெள்ளி கிரகத்தைச் சுக்கிர பகவான் என்றும் அழைக்கின்றனர்.

யுனானி மருத்துவர்கள் வெள்ளி கிரக தோஷத்தை நீக்குவதற்காக அத்தி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். அத்தி மரத்தின் அடியில் அமரச் செய்வார்கள்.அரை மணிநேரம் அத்தி மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கச் செய்வார்கள். இதனால் வெள்ளி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நமது உடலில் சென்று நல்ல உடல் நலனைத் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது.அத்தி மரம் வெள்ளி கிரகத்தின் நல்ல மின் கதிர்வீச்சுகளைத் தன் உடலில் உறிஞ்சி நிரப்பிக் கொள்கின்றது. அதுதான் அதனுடைய மருத்துவ குணமாக மாறுகிறது என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.

மருத்துவ குணம்; அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.

இலை: அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.

பட்டை: அத்தி மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.

பழம்: நபிபெருமானார் (ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும் என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி, வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.பழங்களை இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும். நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண முடியாது.தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.

டாக்டர் ஹகீம் எஸ்.அக்பர் கவுஸர்

நோய் தீர்க்கும் ராசி மரங்கள்-அரச மரம்

அரச மரம்



மரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வெளியேற்றும். அதனால்தான் கோயில்களின் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரிப்பார்கள். இதேப் போல், பொது இடங்களில் கிராமங்களில் அரச மரத்தை நடுவார்கள்.

அரச மரத்திற்கும், வியாழன் (Jupiter) கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன. கிரகங்களில் வியாழன் கிரகம் சக்தி வாய்ந்தது. இது குழந்தை பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வியாழன் கிரகம் மனிதனின் தொடைப் பகுதியை அதிகளவில் பாதிக்கும். வியாழக்கிழமையன்று வியாழன் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகிறது. அதனால்தான் அந்த தினம் வியாழக்கிழமை (Thursday)என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.

தனுசு ராசி, மீனம் ராசி, புனர்பூசம் நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கும், நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும் அரசன் மரம் உகந்த நன்மை தரும் மரமாகும்.

தோல் நோய்கள், காயங்கள், தீப்புண், அஜீரணம், நடக்கும் போது கால் மடங்கிப் போதல், தொழுநோய், மூட்டுவாதம், இதய பலவீனம், மது மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற நோய்களும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.

இந்து சமுதாய மக்கள் வியாழன் கிரகத்திற்கு "குரு' என்று அழைப்பார்கள். வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும்.

வியாழன் கிரகத்தால் உண்டாகும் நோய்கள், தீமைகளுக்கு வியாழன் தோஷம், குரு தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தை நீக்க நவக்கிரக ஆலயங்களுக்குச் சென்று குரு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு நூறு முறை சுற்றி வருவது இந்து சமுதாய மக்களின் ஐதீகம்.

உண்மையில், அரச மரம் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு அடைத்து பாதுகாத்துக் கொளளும். அதுதான் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகததிலும் மருத்துவ குணமாக மாறுகிறது.

மருத்துவ குணங்கள்

இலைகள்: இளம் துளிர்களை பாலில் அல்லது தண்ணீரில் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மூளைக்கு பலம் கிடைக்கும்.

இதன் இலைகளை நிழலில் உலர வைத்து, பவுடராக்கி, கருவேலம் பிசின் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி ஒரு மாத்திரையை சுவைத்துச் சாப்பிட்டால் இருமல் குணம் பெறும்.

ஏழு முதிர்ந்த இலைகளை எரித்து, தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.

மரப்பட்டை: இம்மரத்தின் பட்டையையும், இலைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் நீங்குவதுடன், இரத்தம் சுத்தமாகும்.

பட்டைச்சாறு: இம்மரத்தின் பட்டைச்சாறு மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

பழம்: இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்கும். இதை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். அதனால்தான் "அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்ற பழமொழியும் சொல்லப்படுகிறது. மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது.

"ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களை குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது.

டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்

Saturday, November 6, 2010

மேட்டூர் அணைக்கு 74-வது பிறந்த நாள்!

இன்று நேற்றல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் ரத்தத்தோடு கலந்துவிட்டது காவிரி ஆறு. ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் என்று பல மாவட்டங்களில் இருக்கும் விவசாயப் பெருமக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதும் காவிரி ஆறுதான்.

அப்படிப்பட்ட காவிரி ஆறு கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வரும்போது, தன் மடியில் தேக்கி வைத்துக் கொண்டு, அமைதிப்படுத்தி, சீராட்டி, தேவைப்பட்ட போது தேவைப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கும் மிக முக்கியமான வேலையைச் செய்கிறது மேட்டூர் அணை. காவிரி ஆற்றுப் பாசன விவசாயிகள் காவிரி ஆற்றோடு மேட்டூர் அணையையும் கரிகாலன் கட்டிய கல்லணையையும் மறப்பதே இல்லை.

அத்தகைய சிறப்பு கொண்ட மேட்டூர் அணைக்கு இன்று 75-வது பிறந்த நாள். கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1934-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி அன்றுதான் மேட்டூர் அணை பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சேலத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் இருக்கும் மேட்டூர் என்கிற ஊர். இரு பக்கம் மலைக் குன்றுகள். நடுவே உள்ள பள்ளத்தில் கரை புரண்டு ஓடுகிறது காவிரி ஆறு. வெள்ள காலத்தில் பெருக்கெடுத்து ஓடி, நாடு முழுக்க இருக்கும் கழனிகளை நாசம் செய்தது. தடுத்து நிறுத்துவதற்கு வழி இல்லாததால், மழை இல்லாத காலத்தில் காவிரி ஆற்றுத் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

இதன் காரணமாக, காவிரி ஆற்றுக்குக் குறுக்கே ஒரு அணை கட்ட வேண்டும் என்கிற யோசனை 1801-ஆம் ஆண்டே பிரிட்டிஷ் கிழக்கிந்திய சபையினருக்கு வந்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கியவுடன் மைசூர் சமஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அணையைக் கட்டும் முயற்சியைக் கைவிட்டது கிழந்திந்திய சபை.

1835-ஆம் ஆண்டில், சர் ஆர்தர் காட்டன் என்கிற பொறியாளரை மீண்டும் மைசூருக்கு அனுப்பி மேட்டூரில் அணை கட்டுவதற்கான அனுமதியைப் பெற்று வர அனுப்பியது. அணை கட்ட மைசூர் சமஸ்தானம் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டாவது முறையாகவும் திட்டம் கைவிடப்பட்டது.

1923-ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் பகதூர் சி.பி. ராமசாமி அய்யரிடம், தஞ்சை விவசாயிகள் ஒன்று திரண்டு ஒரு கோரிக்கையை வைத்தனர். மேட்டூர் அணை கட்ட நிச்சயம் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. கோரிக்கையை நிறைவேற்றித் தர சம்மதித்தார் சி.பி.ராமசாமி அய்யர். காரணம், இவரது முன்னோர்கள் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதே.

திவான் பகதூர் சி.பி. ராமசாமி, மைசூர் சம்ஸ்தானத்தினரை அணுகி, திவான் பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்துப் பேசினார். வழக்கம் போல மைசூர் சம்ஸ்தானத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தஞ்சை விவசாயிகள் வேறு ஒரு கோரிக்கை வைத்தனர்.

ஆண்டு தோறும் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தினால், பல நூறு கிலோ மீட்டர்களுக்கு பலத்த சேதம் ஏற்படுகிறது. இந்த சேதத்துக்கு நஷ்ட ஈடாக ஆண்டு 30 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தஞ்சமை மாவட்ட கலெக்டர் மூலமாக ஒரு கோரிக்கை மைசூர் சமஸ்தானத்துக்கு அனுப்பினர்.

ஒவ்வொரு ஆண்டும் 30 லட்ச ரூபாயைக் கொடுப்பதைவிட, மேட்டூரில் அணை கட்டிக் கொள்ள சம்மதிப்பதே புத்திசாலித்தனம் என்று சி.பி.ராமசாமி அய்யர் மைசூர் சமஸ்தானத்திடம் எடுத்துச் சொல்லி மேட்டூரில் அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தார். (மேட்டு அணை வரலாறு - நன்றி தமிழ் விக்கிபிடியா) நம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நாம் அணை கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம் பார்த்தீர்களா?

அணை கட்ட அனுமதி வாங்கும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே, அதற்கான ஆய்வுப்பணிகளை தொடர்ந்து செய்து வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 1905 முதல் 1910-ஆம் ஆண்டு வரை ஆய்வுப் பணிகள் நடந்தன. ஆய்வுப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு 1924-ஆம் ஆண்டு 31-ஆம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதே ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி அனுமதியும் வழங்கப்பட்டது. 1925-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி மேட்டூர் அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தலைமை மற்றும் வடிவமைப்பு என்ஜினியர் எல்லிஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமைய்யர், முதன்மை தலைமை முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்து மேட்டூர் அணையைக் கட்டி முடித்தனர்.


1934-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி கடைசிக்கல் வைத்து அணை கட்டும் பணி முடிந்தது. அதற்கடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 21-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றுப் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட்டார் அப்போதைய சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த ஜான் பெடரிக் ஸ்டான்லி. அவரது நினைவாகவே, மேட்டூர் அணை ஸ்டான்லி அணை என்று அழைக்கப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் மேட்டும் அணையைக் கட்டி முடிக்க ஆன செலவு 4.80 கோடி ரூபாய். மேட்டூர் அணையின் உயரம் 124 அடி. 120 அடி தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி உண்டு. அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர். இரண்டு சிறிய மலைகளுக்கு நடுவே உயரமான, நீளமான சுவரை எழுப்பி இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. இந்த அணையின் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. அணையிலிருலிருந்து ஒரு டி.எம்.சி. தண்ணீர் வெளியேறும் எனில், அணையின் உயரத்தில் 1.25 அடி குறையும்.

கர்நாடக எல்லையைத் தாண்டி ஒக்கனேக்கல் எல்லைக்குள் நுழைந்தவுடன், கரடுமுரடான மலைகளில் ஓடி, மேட்டூர் அணைக்குள் தஞ்சமடைந்துவிடுகிறது காவிரி ஆறு.

மேட்டூர் அணை பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் நமக்கு வந்து சேரவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. ஒரு பெரிய அணை கட்டும் போது மிகப் பெரிய அளவில் மக்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். மேட்டூர் அணை கட்டும் போது எத்தனை கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டன? அணை கட்டும் பகுதியில் என்னன்ன இருந்தன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

அணை கட்டுவதற்கு 10 ஆண்டுகளுக்கு காவிரி அணை தடுத்து வைப்பட்டிருந்ததா? அப்படியெனில், அந்த 10 ஆண்டுகளுக்கு காவிரி ஆற்றுத் தண்ணீரை நம்பியிருந்த விவசாயிகள் எப்படிச் சாமளித்தனர்? என்பதெல்லாம் சுவாரஸ்யமான கேள்விகள்.

நடந்தாய் வாழி காவேரியைக் கட்டுப் போடும் மேட்டூர் அணை இன்னும் பல நூறு ஆண்டு காலம் சீறும் சிறப்போடும் இருக்கட்டும் என்று வாழ்த்துவோம்! 

நன்றி ராஜாராம் குமார்

அலட்சியத்தால் அல்லாடும் நிலம்-நீர்-உணவு

அலட்சியத்தால் அல்லாடும் நிலம்-நீர்-உணவு


அலட்சியத்தால் அல்லாடும் நிலம்-நீர்-உணவு
First Published : 12 Apr 2010 12:00:00 AM IST
உழன்றும் உழவே தலை என உழவின் உயர்வைக் குறள் சொல்கிறது. உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என ஒளவையின் நல்வழி உயர்ந்த வாழ்க்கைக்குத் திசைகாட்டுகிறது. உணவு எனப்படுவது நிலமும் நீரும் என உணவின் பிறப்பிடத்தைக் கூறி உழவனைப் பசிப்பிணி மருத்துவன் என புறநானூறு இலக்கணப்படுத்துகிறது.
குறிஞ்சி என்னும் மலை சார்ந்த வனங்களின் மழை வளத்தால் வழியும் நீர், முல்லை வழி ஆறுகளாகி, மருத நிலத்தில் நகர்ந்து செந்நெல் வயல்களைச் செழிக்கச் செய்தபின் மீன் வளம் பெருகிக் காணும் நெய்தலை ஒட்டிய கடலில் சங்கமிக்கும். மழை வளம் குன்றி குறிஞ்சியும், முல்லையும் வறண்டால் பாலை என சங்கத் தமிழ் நிலங்களை வரிசைப்படுத்துகிறது.
இந்நிலங்களில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களின் உணவு முறைகள், உறைவிட வழிகளை எல்லாம் வகை வகையாய்த் தொகுத்து தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.
÷நாடு பூராவிலும் பூகோள, மண்வள, இயற்கை தட்பவெட்ப பருவகால மழையின் அளவுகள், தன்மைகளின் அடிப்படையில் பண்டைய அனுபவம் மற்றும் அறிவியல் பூர்வமான பயிர்வாரி முறை, மழை நீர், நிலத்தடி நீர் பயன்பாடுகள், பிரதேச உணவுப் பழக்கங்கள் அமைந்தாலன்றி நாட்டின் உணவுப் பாதுகாப்பு கானல் நீராகிவிடும்.

பருப்பு, பயறு, சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் விளையத்தக்க நிலங்களுக்கெல்லாம் பாசன வசதிகளைச் செய்து கொடுத்த கண்மூடித்தனமான செயல்களால் சாகுபடியில் கரும்பு, நெல் ஒருபுறமும், பருப்பு பயறு எண்ணெய் வித்துகள் மறுபுறமும் நிலைகுலைந்து விளைச்சல் சரிவடைந்தது. எள்ளும், கொள்ளும் விளைந்த நிலங்களில் நெல், கரும்பு என்றானால் மரபுவழி நஞ்சைப் பாசனம் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தியில் தடுமாற்றங்கள் வராதா?

தினை, சாமை, சீரகம், கடுகு, கேழ்வரகு, பழவகைகள், மூலிகைகள் என்று விளையும் மலைப்பிரதேசங்களில்கூட நிலத்தடி நீரை வைத்து நெல்லும் கரும்பும் பயிரிட அனுமதித்தால் மலைப்பகுதிகளும் விரைந்து வறண்டு, அங்கு வாழும் உயிரினங்கள் தாகத்தால் மடிவது பதற்றமான நிலையல்லவா? நீர், நிலப் பயன்பாடுகளில் சென்ற 35 ஆண்டுகளில் முரண்பாடுகள் முற்றிவிட்டன. புவிவெப்பமும் சேர்ந்து குடிநீருக்காக மலைஉச்சி வன உயிரினங்களும், நிலப்பரப்பு மக்களும் ஒருசேர அலைவதற்கு முற்றிலும் சுயநலத்தை உள்ளடக்கிய பாசனத் திட்டங்களும், நீர்பராமரிப்பும் திறமையற்ற அரசு நிர்வாகங்களுமே மூலகாரணங்கள்.
÷மக்கள் தொகை குறைவாகவும், தட்ப வெப்பநிலை மிதமாகவும், கொண்டுள்ள மேலை நாடுகள் தங்களுக்கு ஏற்புடையது என வகுத்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், நவீன கருவிகளின் பயன்பாடு போன்றவற்றையெல்லாம் வரம்பின்றி இந்தியாவுக்குள் புகுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயலாகும். மக்கள் தொகைப் பெருக்கம் அதிகம் கொண்டு பலதரப்பட்ட தட்பவெப்ப மண்டலங்களையும் அவற்றுக்கு ஏற்புடையதான இயற்கையோடு இயைந்த உணவு மற்றும் உற்பத்தி சாதனங்களையும் புறந்தள்ளினால் வேலை இல்லாத் திண்டாட்டமும், எரிசக்தி பற்றாக்குறையும், சுற்றுப்புறச்சூழல் கேடும் தோன்றிவிடும் என்பதைச் சிந்திக்கத் தவறுவது விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு நிகரான நிலைப்பாடாகும்.
இந்தியாவில் மிகைப்பட்ட வேளாண் எந்திர உபயோகங்களினால் நன்மைக்கு மாறாகத் தீமைகளே அதிகமாகும். விவசாய வேலைகளில் இயன்ற அளவு மனித உழைப்புக்கு முன்னுரிமை தருவதன் மூலம் வலுவான சமூக அமைதியையும் நலமிகுந்த பொது ஒழுக்கத்தையும் நிலைநிறுத்த முடியும்.
நிலத்தடி நீரைப் பாசனத்துக்காகப் பயன்படுத்தும் போதும், அளவின்றி ரசாயன உரங்களைப் பயிர்களுக்குத் தொடர்ந்து இடும் போதும், வளம் குறைந்து விளை நிலங்கள் மலட்டுத் தன்மைக்கு வந்துவிடும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகள் நன்மை செய்யும் புழு பூச்சிகளையும் அழித்துவிடுவதால் காலப்போக்கில் உயிரினங்களின் இயல்பான உணவு சுழற்சி முறைகளில் தடைகள் முற்றி சுற்றுப்புறச் சூழல்களுக்குக் கேடுகள் சூழ்ந்துவிடும்.
ஆட்சி அதிகாரம் தங்கள் வசமே என்பார்க்கும், கொலையின் கொடிய முரடர்க்கும், கல்விஇல்லாத குருடர்க்கும், நீதியைத் தேடி அலுத்துப் போனதாய்க் கூறும் தீவிரவாத வன்முறையாளர்க்கும்கூட பசி வந்தால் ஆற்றுவது உணவு ஒன்றுதான். வாழும் மனிதர்க்கெல்லாம் உணவு என்பதையே முதல்நிலையில் வைக்க வேண்டியதாகிறது.
வேலை இல்லை என்னும் ஓலமும், வேலைக்கு ஆள் இல்லை என்கிற அவலமும் அகல்வதற்கு இதைவிடவும் வேறு எது சரியானது, எளிதானது.
எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று மூன்று ஆண்டுகளாகத் திரிந்த பத்து வாலிபர்கள் வாய்ப்பு ஏதும் இருந்தால் தங்களுக்கு வழிகாட்டும்படி கேட்டார்கள்.
விவசாய வேலைக்குத் தயாரா என்று வினவியதற்கு தாங்கள் பட்டதாரிகள் என்றும், தங்களிடம் உள்ள நிலங்களில்கூட வேலை பார்க்க விருப்பம் இல்லாமல்தான் வேறு வேலை தேடி அலைவதாகவும் சொன்னார்கள்.
அவர்களில் சிலர் குழந்தைகளோடு இருப்பதும், மனைவியின் கூலியை வைத்தே தங்களது குடும்பம் நடப்பதாகவும் அறிய முடிந்தது. பத்துபேருமே பத்தாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை எதிலுமே சொல்லிக் கொள்ளும்படியாய் மதிப்பெண் பெறவில்லை என்பதை அறிய வேதனைமிகுந்தது.
தகுதி, திறமை என்று எதையும் பெற்றிராத அவர்களிடம் இருந்தது வயதும் உடலும் மட்டும்தான். 10-ம் வகுப்போடு இவர்களை வடிகட்டியிருந்தால் தாங்கள் வாழும் இடங்களிலேயே குலத்தொழில், அல்லது வேளாண்மையில் ஈடுபட்டு இந்நேரம் தக்க அனுபவமும், பயிற்சியும் பெற்று சொந்தக் காலில் நிற்கும் சுயமரியாதையான வாழ்வை உறுதி செய்திருக்க முடியும்.
ஆனால் நம் ஊர் விவசாயத்தில்தான் என்ன இருக்கிறது உழவடை, அறுவடை என்று எல்லாவற்றுக்குமே எந்திரங்கள் புழங்கிவிட்டன. அதனால் உடலுழைப்புக்கான வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன.
மலை முதல் கடற்கரை வரையிலும் இப்போது குடிக்கத் தண்ணீர் இல்லாத நிலையும் எப்படி வந்தது என்கிற கேள்வி வலுவடைகிறது. இயற்கை வழி மண்டல வழியான பயிர்வாரி முறை தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்று உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜோக்கிம் வான் பிரெüன் 2008-ம் ஆண்டு கூறியதை தீர ஆராய்வது இப்போது அவசியம் ஆகிறது.
ஆகவே, தேவையை உள்ளடக்கிய தன்னிறைவான உற்பத்திக்கு நதிப்படுகை வழி பயிர்வாரி முறையும், விளைநிலங்களில் இயற்கை சார்ந்த பயிர் சுழற்சி முறையும் அவசியம்.
"பானை சோற்றுக்கு பருக்கை பதம்' என்பதுபோல இதை அந்த பத்து பட்டதாரிகளின் நிலையை வைத்தே இன்றைய நடைமுறைகளை விருப்பு, வெறுப்பின்றி விவாதிக்க வேண்டும்.
மலிவான கல்விச் சாளரங்களின் வழியாய் உயர்கல்வி மாயைக்குள் நுழைந்து பட்டமும் பெற்ற பின்னர் போட்டிகளில் தாக்குப்பிடிக்க முடியாத அநேகர் அந்த 10 பேரைப் போலவே திகைத்துப் போயுள்ளனர்.
சுயநலத்தில் ஆளுமையைத் தொலைத்து நிற்கும் ஆட்சியில், போலி மருந்து தயாரித்து விற்பது போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு படித்த பலரும் வலிந்து தள்ளப்படுகிற துயரம் பெருகி வருகிறது. உணவுத் தேடலின் அருமையை இவர்களுக்குப் புரிய வைக்க அரசாங்கம் தவறிவிட்டது.
உற்றுநோக்கினால் 50 சதத்திற்கும் கீழ் பிளஸ் டூ படிப்பிலும் 60 சதத்திற்கு கீழ் பட்டப்படிப்பிலும், 75 சதத்திற்கு கீழ் மருத்துவம், சட்டம், பொறியியல் முதலான உயர் கல்வியிலும் மாணவர்களைச் சேர்ப்பது வேண்டாத ஒன்று என்கிற முடிவுக்கு வந்தே தீரவேண்டும்.
பட்டதாரிகளில் பலர் திறமை என்று எதுவுமின்றி எதிலும் நிலைக்க முடியாமல் சும்மா இருப்போர் பெருகுவதால் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும். ஆக, அனைவருக்கும் கல்வி என்பதை 10-ம் வகுப்போடு அல்லது 14 வயதுக்குள் முடித்துவிடவேண்டும்.
அடுத்தகட்ட படிப்புக்கு விதை நேர்த்தி செய்வதுபோல தேவைக்கு ஏற்றாற்போல் தரம் பார்த்து அனுமதிக்கிற நடைமுறையைத் துணிந்து தோற்றுவிக்க வேண்டும். உயர் கல்வி என்பது ஓர் அலங்காரப்பொருள் அல்ல, ஆடம்பரத்துக்கு ஆனதும் கிடையாது, ஒளிரும் அறிவையும், மிளிரும் திறமையையும் மெருகேற்றிக் கொள்கிற அரியதோர் வாய்ப்பு என கருதும் மனப்பாங்கு கொள்கைத் திட்டங்களை வடித்து வழங்கும் அரசாங்கத்திடம் முதலில் இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் 10 முதலாளிகளை வலுவடையச் செய்வதைக் காட்டிலும் 10 லட்சம் விவசாயிகளை தலைநிமிரச் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது.
வேளாண்மையை மறந்து வெள்ளாமையை இழந்து, விவசாயம் விளங்காத ஒன்று என்று கருதி உயர்கல்வித் தொழில் முதல் கார் தொழில் வரை வரிச்சலுகைகளைத் தரும் ஆட்சியில் முரண்பாடுகள் முற்றி மக்களின் கும்பி எரிந்து குடலும் கருகிப் போவது உறுதி.
நன்றி: தினமணி

சிந்திப்போம், விரைந்து செயல்படுவோம்

பஞ்ச பூதங்களில் ஆரம்பத்தில் தோன்றியது ஆகாயம்.  அதன் பிறகு காற்று அடுத்ததாக வெப்பம் வந்தது.  இந்த வரிசையில் நீர் வெளிப்பட்டது.  அதுவரை உயிர்கள் இல்லை.  ஐந்தாவதாக நிலம் வந்த பிறகுதான் நிலைத்த தன்மையுடைய உயிர்கள் தோன்றின.  மண்ணை வணங்குங்கள்.  நல்ல வண்ணம் வாழ முடியும்.  இப்படி சொன்னவர் சட்டை அணியாச் சாமியப்பன், கொங்குகாரர்.


மண்ணைக் கெடுத்தது  நம்முடைய ஆடம்பரம் தான். 

ஏ.சி. மெஷின் இல்லாமல் யாராலும் வாழ முடியவில்லை.  பராவாயில்லை.  ஒரு ஏ.சி. மெஷின் வைத்திரு°நதால் ஒரு பூவரச மரத்தையும் வையுங்கள்.  அரச மர மனங்கள் தான் மேம்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன.  ஆளசியும் நித்திய கல்யாணியும் 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை வெளியிடுவதாகச் சொல்கிறார்கள்.
எனவே, மழை ஈர்ப்பு மையம் அமைப்பதில் அக்கறையை காட்டுங்கள் என்கிறார் அவர்.

http://www.agriculturetheaxisoftheworld.com/2010/04/alias.html
மரங்களை நாம் இழந்துவிட்டோம் எனில், நாளைய உலகம் படும் துயரத்திற்கு அளவே இல்லை என படித்த  ஞாபகம்.
சிந்திப்போம், விரைந்து செயல்படுவோம்.

Monday, October 4, 2010

இதயம்

இதயத்தைத் தமரகம் என்ற சொல்லால் தமிழ் மருத்துவ  நூல் குறிப்பிடுகிறது.

மனம் என்பது இதயமா?  மூளையா?  என்றால் மூளையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு உறுப்பு இதயம்.


இதய வலுவிற்குச் சில மருத்துவக் குறிப்புகள்

அன்னாசிப் பழத்தை மேல் தோல் சீவிக் கறுக்குவாட்டில் வட்டங்களாய் நறுக்கி அதன் மேல் சீனி  துா வி ஒரு பாத்திரத்தில்  நான்கு மணி நேரத்திற்கு மேல் வைத்திருங்கள்.  இதனை நீரிழிவு நோய் இல்லாதவர்கள் காலையில் மட்டும் பருகிவர இதயம் பலமாகும்.

மருதமரங்கள் உள்ள சாலையில்  அந்தக் காற்றில் நடந்தாலே மாரடைப்பு வராது என்பார்கள்.

உபவாசம்

உபவாசம் மற்றும் உண்ணா விரதம் என்ற இரண்டுமே பட்டினியாக இருப்பதைத்தான் குறிக்கிறது. 

மனிதனுக்கு எப்படி உணவு தேவையோ அதே போல் உண்ணா நோன்பும் தேவை. 
பல மருத்துவா்களால் கொடுக்கப்பட்ட  பல மருந்துகளால் குணமடையாத நோய்கள் உண்ணாநோன்பினால் குணமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
உண்மையான பசி எடுக்க தொடங்கிவிட்டால் உடலில் தீய பொருள்கள் நீங்கிவிட்டதாகவும் உடல் நல்ல நிலையை அடைந்விட்டதாகவும் கருதி நோன்பை முடிக்க வேண்டும்.

Wednesday, September 8, 2010

உணவே மருந்து

உணவே மருந்து

அம்மை நோய் பரவும் நேரத்தில், குழந்தைகளை பாதிக்கமால் தடுக்க தாழம்பூ சர்பத் 2 தேக்கரண்டி எடுத்து 15 மி.லி. தண்ணீரில் கலந்து ஐந்து நாளுக்குக் கொடுங்கள்.


மூல நோய்க்கு மிகச் சிறந்த மருந்துணவு ரோஜாப்பூ குல்கந்து.  இது கடைகளில் கிடைக்கிறது.  இதனை வாங்கி வைத்துக் கொண்டு காலையும் இரவும் அல்லது இரவு படுக்கைக்குப் போகும் முன்னராவது ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.  நாமே தயாரிக்கும் முறை
ரோஸ் நிறத்தில் உள்ள ரோஜா இதழ்களைத் தனியா எடுத்து அதில் புழு, பூச்சி இல்லாமல் சுத்தம் ‌செய்து அதன் அளவிற்கு மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வாயகன்ற பாட்டில் ஒன்றில் போட்டு அதன் அளவிற்குத் தேன் கலந்து கிளறிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.  மூல நோய் வராமல் பார்த்துக் கொள்வது, வந்துவிட்ட மூல நோயை நீக்குவதும் நீங்கள் உண்ணும் உணவி‌ல் தான் உள்ளது.

காலையில் எழுந்தவுடன் அடுக்குத் தும்மல் போடுகிறவர்கள் பலர், அவர்களுக்காக ஒரு டீ,
சுத்தம் செய்த புதினா இலை ஒரு பிடி, துளசி இலை 1 பிடி, இரண்டையும் ஒன்று சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கப்பாகக் குறுகும் படிக் கொதிக்க வைத்து வடிகட்டிப் பால் சர்க்கரை சேர்த்தோ அல்லது தனித்தோ சாப்பிடலாம்.

சாதாரணமாக டீ கடையில் டீ சாப்பிடுவர்களுக்கு டீத்தூளில் என்னவெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது என்பதை செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.  அதனால் கலப்பட டீயைத் தவிருங்கள்.  அதற்கு பதிலாக சுக்கு, மல்லி காபி, கருப்பட்டிக் காபி, வல்லாரைடீ,  ஆகியவற்றை சாப்பிடலாம்.

உணவே மருந்து

உடல் நலம் பேணுவது பற்றி நான் புத்தகங்களில் படித்த சில விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஆண்களுக்கு அந்தப் பிரச்சினையா?
பாதம் அல்வா, கசகசா அல்வா, முந்திரி அல்வா போன்றவை விந்தணுக்களை அதிகரிக்க உதவும் துணை உணவுகள்.

வெங்காயத்தை 30 கிராம் எடுத்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலக்கி குடிக்க தாது பு‌ஷ்டி உண்டாகும்.


ஆப்பிள் பழத்தின் உள்ளே உள்ள விதைகளை இனித் தூக்கி எறியாதீர்கள்.  அதைப் பாலில் கலந்து குடிக்க ஆண்மைப் பெருக்கு உண்டாகும்.

பச்சை வேர்க்கடலையை நல்லெண்ணெயில் ஊற வைத்து தினமும் 5 கடலைகள் வீதம் சாயங்காலத்தில் தின்று வர ஆண்-பெண் சேர்க்கையில் ஆர்வம் உண்டாகும்.

முட்டை மஞ்சள் கரு ஒரு பங்கு, வெங்காயச்சாறு, தேன் வகைக்கு அரைப் பங்கு சேர்த்து ஒன்றாகக் கலக்கி அடுப்பில் ஏற்றிச் சிறு தீயாக எரித்துத் தண்ணீர் சுண்டியவுடன் எடுத்து ஆறவிட்டுக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட இந்திரியம் அதிகமாகும். 

Sunday, April 4, 2010

மின்சார பற்றாக்குறை

மார்ச் மாதம்  முதல் நமக்கு வரவு=செலவு பற்றாக்குறை என்றால், கூட மின்பற்றாக்குறையும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.


உலகம் முழுவதும் மாற்று  மின் உற்பத்தி பற்றி அதிக அளவு நடைமுறை படுத்தி வரும் நிலையில் நாம் இன்னும் அதை பற்றி நினைக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை.


அன்டை நகரமான பெங்களுரில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் திட்டத்தை பயன்படுத்துகிறார்கள்.


நம் சென்னை நகரில் இத்திட்டம் பற்றி யாரும் பேசுவதில்லை, நடைமுறைப்படுத்த யோசிப்பதும் இல்லை, ஆனால் நாள்தோரும் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்டி, ஏ.சி. இவற்றின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.


குறைந்தபட்சம் சோலார் முறையில் இயங்கும் தண்ணீர்  கொதிக்க வைக்கும் கருவி (வாட்டர் ஈடர்) யாவது பயன்படுத்த அரசு தகுந்த வழிவகை செய்யலாம் என்பது என் கருத்து.
இந்த இணையத்தளத்தில் நமக்கு தேவையான விவரங்கள் மற்றும் சோலார் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.  பயனுள்ளதாக இருக்கும் எ‌ன நினைக்கிறேன். 
http://www.solkar.in/

Friday, November 27, 2009

அமெக்டாலா - உணர்ச்சி வசப்படுதல் பற்றிய அறிவியல் தகவல்



அமெக்டாலா Amygdala:

அமெக்டாலாவை பற்றி தமிழி வந்த முதல் நூல்
"இட்லியாக இருங்கள்". சோம. வள்ளியப்பன்,
-------வாசித்து பாருங்கள்.

மூளை யின் இரண்டு பக்கமும், பக்கவாட்டுப் பகுதியில் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டுள்ள சிறிய சைஸ் பாதாம் பருப்பு அளவேயுள்ள உறுப்பு. இது தோற்றத்துக்கு பாதாம் பருப்பினை போல் இருப்பதால் ‌ பாதாம் பருப்பி‌ன் கிரேக்கப் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.













நியோகார்டெக்ஸ் தான் அன்பு பாசம், காதல் போன்ற உணர்ச்சிகளின் தலைக்காவேரி என்று சொல்லலாம். நம்முடைய அத்தனை வளர்ச்சிகளுக்கும் இன்றைய விபரீதச் சிந்தனைகளுக்கும் இவர்தான் காரணம். ஆனால் அமிக்டலா , நியோகார்டெக்ஸ் முன்னரே விலங்குகளின் தலைக்குள் வந்துவிட்ட சீனியர்.


அமிக்டலா நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர்

நடக்கும் நம்பவங்களை வைத்து, இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்பதையெல்லாம் மனம் தனக்குத் தெரிந்த விதம் புரிந்து கொண்டு, உள்ளே போட்டுக்கொள்கிறது. பின்பு, அதை ஒட்டியே மற்ற செயல்பாடுகளை நடத்துகிறது. வேண்டியவர் வேண்டாதவர்கள் என்கிற எண்ணம் உருவாவது இப்படித்தான் .

மூளையில் இரண்டு வகையான நினைவு முறைகள் உள்ளன. ஒன்று, சாதாரண விஷயங்களை நினைவு வைத்துக் கொள்வது. அதன் பெயர் ‌ ஹிப்போகேம்பஸ். மற்றொன்று உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதுதான் அமிக்டலா. எமொஷனல் மெமரீஸ் ஸ்டோர்.

இனம் தெரியாத பயம், கோபம் அல்லது சிலரைப் பார்த்தாலே பாசம் பொங்குவது ஏன் என்று நமக்குக் காரணம் தெரியாத உணர்வுகள், சிலருக்கு மிக அருகில் சந்தித்த விபத்துகள், அங்கு பார்த்த ரத்தம், ஆஸ்பத்திரி வாசனைகள் இன்னும் சிலருக்கு அவர்களைப் பயமுறுத்திய குரல்கள்.
என நம் வாழ்வில் முக்கியப் பங்காற்றுபவர் இந்த அ‌மிக்டலா தான்.

கண், காது மூக்கு, உடம்பு, நாக்கு போன்ற எந்த புலனிலிருந்து ஒரு செய்தி முதலில் தலாமஸ‌்‌ு க்கு தான் போகும் தலாமஸ், அந்த விவரங்களை மூளை புரிந்து கொள்ளும் விதமாக மாற்றும்.
ஆனால் சில ஆபத்தான சமயங்களில், செய்தி, தலாமஸ‌ு க்கு போகும் போதே இன்னொரு ரூட்டில் அமிக்டலாவுக்கும் போய்விடும். நியோகார்டெக்ஸ்க்கு தகவல் தெரியும் முன்னரே அமிக்டலாவுக்குத் தகவல் நேரடியாகப் போய் அவரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்.


சரி, எப்படி இந்த அமிக்டலாவை கட்டுப்படுத்துவது,
மனதில் ஒடும் எரிச்சல் மற்றும் வெறுப்பலைகளின் வேகத்தினையும், போக்கினையும் சரியாகக் கவனித்தல், மனத்தின் எண்ண ஓட்டத்தினை, தானே வெளியாள் போல, கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தல்.
மேலும், தன்னைக் குறித்த மிகத் துல்லியமான மதிப்பீடு (Accurate Self Assessment)
தன் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் எதுவாக இருந்தாலும் தெரிந்து கொள்வது தான் செல்ஃப் அ‌வேர்னஸ்.

Saturday, November 21, 2009

முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.


சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்



இப்போது பரவலாக இருக்கும் பிரச்னை இளநரை. இதனால் பலரும் ஹேர் டை உபயோகிக்கிறார்கள். ஆனால் அவை கெமிக்கல் டை என்பதால் பல கெடுதல்கள் ஏற்படுகின்றன. இயற்கையான முறையில் முடி கருப்பாக வளர என்ன செய்ய வேண்டும். இயற்கை ஹேர் டை எப்படித் தயாரிப்பது?கலைமுருகன்,மயிலாடுதுறை.

திரிபலா சூரணத்துடன் அதி மதுரமும் பொடித்துச் சேர்த்து ஆயுர்வேத மருந்துக் கடைகளில் திரிபலாதி சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஓர் இரும்புச் சட்டியில் சுமார் 50 கிராம் திரிபலாதி சூரணத்தைப் போட்டு, நீலி பிருங்காதி எனும் தைலத்தை சிறிது விட்டு இளந்தீயில் வறுக்கவும். வெளிர் மஞ்சள் நிறத்திலுள்ள திரிபலா சூரணம், கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாகத் தொடங்கும். நன்றாகக் கறுப்பாக மாறியதும், அதிகம் வறுத்துவிடாமல், அதைக் கீழே இறக்கி, சூடு ஆறும் வரை இரும்புச் சட்டியிலேயே வைத்திருக்கவும்.அதன் பிறகு கறுப்பாக மாறிய இந்தச் சூரணத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்தப் பொடியை சிறு அளவில் ஒரு கிண்ணத்தில் எடுத்து, நீலி பிருங்காதி தைலத்தைக் கொஞ்சமாக விட்டுக் குழைத்து ஹேர் டை பிரஷ்ஷில் நனைத்து, வெளுத்துப் போன முடிகளில் வேர் முதல் நுனி வரை மெதுவாகத் தடவ, முடி கருப்பாகத் தெரியும். இது ஒரு புதிய முயற்சியே. முடிக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாது. கண்களுக்கும்,தோலுக்கும் நல்லது. இதிலுள்ள ஒரு சிறுகுறை தலைக்குக் குளித்தவுடன் இந்தச் சாயம் நீங்கிவிடும். தலைக்கு நல்லது என்பதால் இந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

அசல் இரும்புத் துண்டை அரத்தினால் ராவி மிக நுட்பமான இரும்புப் பொடி 300 கிராம் தயாரித்து, வாயகன்ற பீங்கான் பாத்திரத்தில் வைத்து, பொடி நன்றாய் மூழ்கும் அளவு பசுவின் சிறுநீரை ஊற்றி வெயிலில் வைக்கவும். இவ்விதம் 7 நாட்கள் தினம்தோறும் புதிதுபுதிதாய் பசு மூத்திரம் ஊற்றி வெயிலில் வைக்கவும். அதன் பிறகு இரும்புத்தூள் பழுக்கும் வரை இரும்புச் சட்டியில் சூடாக்கி, சூடு ஆறியதும் அம்மியில் அரைக்க வேண்டும். இரும்புப் பொடிக்குச் சமமாக வாயு விடங்கம் 300 கிராம், தேன் நெய் சற்றுத் தூக்கலாகச் சேர்த்து அரைக்கவும். இந்த லேகியத்தை வேங்கை மரத்தின் வைரத்தினால் செய்யப்பட்ட சம்புடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அதன் மூடியும் வேங்கை மரமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வருடம் அதன் உள்ளே வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு காலையில் 3 கிராம், மாலையில் 3 கிராம் அளவு சாப்பிடலாம். 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மயிர் நன்றாக கறுப்பாகி வளரும். ஆயுள்காலம் பூராவும் கேசம் கறுப்பாகவே இருக்கும். நல்ல பலமாகவும் இருக்கும்.

இளநரைக்கு முக்கியமான காரணம், உடலில் பித்த தோஷத்தின் இயற்கைக் காரியம் குன்றுவதும், கெடுவதும்தான். தலைமுடியின் நரை நீங்க அதற்குத் தகுந்த தைலங்களைத் தலையில் தேய்ப்பது மட்டும் முற்றிலும் போதுமானதல்ல. இக்காலத்தில் பூசப்படும் ஹேர் டை, முடிக்குக் கெடுதலை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். அதனால் செயற்கைச் சாயம் பூசுவது கெடுதல். மேலுக்குத் தகுந்த தைலங்கள் பூசிக் கொண்டு உள்ளுக்கும் இதுபோன்ற ரசாயனம் சேவிப்பதே நன்மை தரும்.

விற்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் சியவனப்ராசம் லேஹ்யம், நாரசிம்ஹ ரசாயனம், குமார்யாஸவம் லோஹ பஸ்மம் போன்ற உள் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட மிகவும் நல்லது.

Sunday, July 12, 2009

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்


நான் சர்வசாதாரணமாக 8 முதல் 10 இட்லிகள் சாப்பிடுகிறேன். அதுபோலவே 8 - 10 சப்பாத்திகள், பூரி, தோசை என்றெல்லாம் சாப்பிட்டாலும் அவை அனைத்தும் விரைவில் ஜீரணமாகி, மறுபடியும் பசி எடுத்துவிடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? அதிகப் பசியினால் உடல் சோர்ந்து, வாய் வரண்டு போகிறது. இந்த உபாதை தீர ஆயுர்வேத மருந்துகளும், என்ன உணவு வகைகளும் சாப்பிட வேண்டும்?

ரங்கராஜன், சென்னை.

உடலில் இயற்கையாக இருப்பதைவிட கபம் குறையும் போது பித்தம் சீற்றமடைந்து பசித்தீயின் அருகில் தங்கும். வாதத்துடன் சேர்ந்து தனக்கு உரியதான இயற்கைச் சூட்டினால் சீரணப்பையில் உள்ள நெருப்பிற்கு வலிமையைக் கொடுக்கும். இவ்வாறு பித்தத்தின் சூட்டினாலும் வாதத்தின் தூண்டுதலினாலும் வீறு கொண்ட பசித்தீ வரண்டு போன உடலில் உணவை லட்சியம் செய்யாமல் எத்தகைய உணவையும் விரைவில் அடிக்கடி எளிதில் செரிக்கச் செய்துவிடும். அத்துடன் நில்லாமல் உணவு சீரணமானதும் வலிமை பெற்ற பசித்தீக்கு உணவில்லாவிடில் இரத்தம் முதலிய தாதுக்களையும் எரிக்கும். அதனால்தான் உங்களுக்கு உடல் சோர்ந்து வாய் வரண்டு போகிறது.

நன்றாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை நீர் ஊற்றி அணைப்பதுபோல எளிதில் செரிக்காத எண்ணெய்ப் பசை, குளிர்ச்சியான வீர்யம் மற்றும் இனிப்புச் சுவை கொண்ட நீர்த்தோற்றத்தில் உள்ள குடிநீர் வகைகள், எள்ளுடன் கலந்து பக்குவம் செய்யப்பட்ட இறைச்சி மாவினாலும் வெல்லத்தினாலும் செய்யப்பட்ட உணவு வகைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசித்தீயைச் சமப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் பால் பாயசம், பயத்தம் பருப்பு, நெய் இவற்றைச் சேர்த்து பக்குவம் செய்த சாதம், நெய்யில் பக்குவம் செய்த தின்பண்டங்கள், நிலையாக நிற்கும் தண்ணீரில் வாழும் மீன் போன்ற பிராணிகளுடைய இறைச்சிகள், கொழுத்த செம்மறியாட்டின் மாமிசம் முதலியவற்றையும் மிகுதியான பசித்தீயைத் தணிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

1 டம்ளர் (சுமார் 250 கிராம்) பச்சரிசியில், 6 டம்ளர் தண்ணீர் விட்டு, சாதம் வெந்தவுடன் வடிகட்டி, அந்தக் கஞ்சியில், 5 கிராம் தேன் மெழுகு கலந்து உணவாகப் பருகலாம்.

1 டம்ளர் கோதுமையை வறுத்து மாவரைத்து நெய் கலந்து, சுமார் 4 - 5 டம்ளர் தண்ணீர் கலந்து கஞ்சியாகக் காய்ச்சி மதிய உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகப் பருக மிக நல்லது.

அரை டம்ளர் எள்ளு, அரை டம்ளர் உளுந்து முதலியவற்றை நன்றாக அரைத்துச் சுடுநீர் சர்க்கரை சேர்த்து உருண்டைகளாக்கிப் பக்குவம் செய்து உட்கொள்ளச் செய்தால் வீறு கொண்ட பசித்தீ மென்மையடையும்.

எண்ணெய்ப் பசையுள்ள மாமிச சூப்பைப் பருகுவது, நெய்யில் தேன் மெழுகு கலந்து குளிர்ந்த நீரும் கலந்து பருகுதல், கோதுமை மாவை நெய்யும் அல்லது பாலும் கலந்து உண்பது முதலியன நல்லது.

நெய், மாமிசத்திலுள்ள எண்ணெய்ப் பகுதி, எலும்புக்குள்ளிருக்கும் மஜ்ஜை இம்மூன்று வகை எண்ணெய்களையும் கோதுமை மாவுடன் கலந்து பாலுடன் சேர்த்துச் சாப்பிட, பசித்தீ அடங்கும். இதைச் சாப்பிட்ட பிறகு, பகலில் படுத்துத் தூங்குவது நல்லது.

இவ்வாறு கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிடுவதால் குறைந்துபோன கபம் வளரும். சீற்றமாயிருந்த பித்தமும் தணியும். வாதம் இயற்கை நிலையை அடையும். சடராக்கினி எனும் பசித்தீ சமநிலையை அடையும். தாதுக்கள் இயற்கைநிலையில் இருக்கும். சமநிலையிலுள்ள அக்கினி உணவைச் சரியாகப் பக்குவம் செய்து உடல் வளர்ச்சி ஆயுள் வலிமை இவற்றை வளர்க்கிறது.

மிருத்வீகாதி லேஹ்யம், பரூஷகாதி லேஹ்யம், அமிருத ப்ராசம் கிருதம், ப்ருகத்சாகலாதிகிருதம், சங்கபஸ்மம், ஹிங்குல பஸ்மம், அப்ரக பஸ்மம், விதார்தியாதி லேஹ்யம், திகார்ஷாதி கஷாயம் போன்ற சில ஆயுர்வேத மருந்துகள் கொழுந்துவிட்டு எரியும் பசித்தீயைச் சாந்தப்படுத்தும் வீர்யம் கொண்டவை. உங்களுக்கு அருகாமையிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகி, எது தங்களுக்குப் பொருந்துமோ அதை அவரிடமிருந்து வாங்கிச் சாப்பிட்டு உபாதையிலிருந்து விடுபடலாம்.