Sunday, July 12, 2009

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 17: கடக ராசி - முருக்கன்; சிம்ம ராசி - பாதிரி


நண்டு வடிவில் வானத்தில் நட்சத்திரக் கூட்டம் காணப்படுகிறது. இதற்கு கடக ராசி என்பார்கள். இந்த நட்சத்திர மண்டலம் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. கடக ராசி மண்டலத்தின் கதிர்வீச்சுகள் மார்பகம் மற்றும் நெஞ்சு பகுதியில் உள்ள உள் உறுப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. இதன் கெட்ட கதிர்வீச்சுகள் நுரையீரல், இதயம், மார்பக மற்றும் நெஞ்சு எலும்புகளைப் பாதிக்கக்கூடும். பஞ்ச பூதங்களில் இது நீருடன் தொடர்பு கொண்டது. இந்த ராசியில் பிறந்தவர்கள் பெற்றோரிடம் அன்புடன் இருப்பார்கள். இவர்களுக்கு நிலைமாறும் குணங்கள் இருக்கும். திங்கட்கிழமை பிறந்தவர்களுக்கும் ஜூன் 21 ந்தேதி முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்களுக்கும் ஏற்ற மரம் முருக்கன் மரமாகும். இம்மரத்தை இவர்கள் அரைமணி நேரம் கட்டிப்பிடித்தால் அல்லது நிழலில் உட்கார்ந்தால் சந்திர கிரக தோஷமும், கடக ராசி நட்சத்திரங்களின் தோஷமும் நீங்கும்.

இந்தக் கிரகங்களினால் ஏற்பட்ட நோய்களும் குணம் பெறும் இதைப் பற்றி கடந்த இதழ்களில் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள முருக்கன் மரத்தைப் பற்றிக் கட்டுரை எண் 5 இல் சொல்லப்பட்டுள்ளது. வாசகர்கள் விபரங்களுக்கு அதையும் பார்க்கலாம்.

இவ்விதழில் சிம்மராசிக்காரர்களுக்குப் பயன்தரும் பாதிரி மரத்தைப் பற்றியும் பார்ப்போம்.

சிம்ம ராசி - பாதிரி மரம்

ஒரு மனிதனின் உடல் அமைப்பு, மனநிலை, பழக்க வழக்கங்கள் எல்லாம் அவர்கள் பிறந்த நேரம், காலம் அப்போது ஆட்சியில் இருக்கும் கிரகம், நட்சத்திரங்களைப் பொறுத்துத்தான் அமைகிறது என வானவியல் சாஸ்திரம் கூறுகிறது. சூரிய கிரகம், சிம்ம ராசி, ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 வரை பிறந்தவர்கள் மகம் நட்சத்திரம், பூரம் நட்சத்திரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இயற்கையாகவே நிலையான குணம் உடையவர்களாகவும், பிள்ளைகள் மீது அளவில்லாத பாசம் இருப்பவர்களாகவும் விளங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் இதய நோய்களால் பாதிக்கப்படுவார்கள். இந்த ராசி, நட்சத்திரமானது பஞ்சபூதங்களில் நெருப்புடன் தொடர்புடையது.

சிம்மராசி மண்டல நட்சத்திரக் கூட்டத்தின், கெட்ட கதிர்வீச்சுகளால் பலவகையான நோய்கள் உண்டாகின்றன. அதற்குக் கிரக தோஷம், இராகு தோஷம் என்பார்கள். இதனைத் தடுக்கவும், தோஷத்தால் உண்டான நோய்களைக் குணப்படுத்தவும் பாதிரி மரம் பயன் அளிக்கிறது.

இம்மரத்துக்கு ஆங்கிலத்தில் Stereospermum suavelons d.c., PAADARIA எனவும் அழைப்பார்கள். இந்து முனிவர்கள், ஜெயின் தீர்த்தங்கரர்கள், சாதுக்கள் இம்மரத்தின் அடியில் தவம் இருந்து ஞானம் பெற்றுள்ளனர். பெருமளவு மின்காந்த சக்தி இம்மரத்தின் ஒருபகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இவை, இயற்கையான சக்திகளை மனிதனுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மரம் பெண்களை மயக்க வைக்கும் பூக்களைத் தருகிறது. பெண்களை வசியப்படுத்த இதைப் போலிச் சாமியார்கள், மந்திரவாதிகள் பயன்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.

இம்மரத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 12 வகையான நறுமணம் கொண்ட பூக்கள் மலருவது விசேஷமான செய்தியாகும்.

இலைச் சாற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் உஷ்ணம் நீங்கும்.

பூக்களை அரைத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் மேக நோய், விக்கல் குணம் பெறும்.

வேரை உலரவைத்துப் பவுடராக்கிச் சாப்பிட்டால் சர்க்கரைப் புண், மூலம் குணம் பெறும்.

ஒரு பங்கு மரப்பட்டை, 10 பங்கு தண்ணீரில் ஊற வைத்து அதனை 15 முதல் 30 மில்லி வரை, தினசரி 2 வேளை குடித்தால் இரத்த சோகை, இருமல், வயிற்றுவலி குணம் பெறும்.

இம்மரத்தின் பூக்கள், பட்டை, வேர், இலைகள் என அனைத்தும் சிறுநீரக நோய்க்கு நல்ல மருந்து எனக் கூறப்பட்டுள்ளது.

2 பங்கு மரப்பட்டையை 10 பங்கு தண்ணீரில் ஊற வைத்து 15 மில்லி அளவிற்கு தினசரி 2 முறை குடித்தால் இரத்த சோகை அதாவது ஹீமோகுளோபின் உற்பத்தி தடைபடுவதைக் குணமாக்குகிறது.

முருக்கன் மரம், பாதிரி மரம் ஆகியவற்றை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்திலும் காணலாம்.

No comments: