Sunday, April 26, 2009

நோய் தீர்க்கும் ராசி மரங்கள்

நோய் தீர்க்கும் ராசி மரங்கள்
கருங்காலி மரம்
டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்
First Published : 26 Apr 2009 01:45:00 PM IST


குழந்தைகளுக்குப் பலவகையான பயங்கர நோய்கள் ஏற்பட்டு மரணப் பிடியில் இருக்கும் போது, நகம் - உதடு வெளிர் நிறத்தில் மாறும்போது, செவ்வாய் தோஷம் ஏற்பட்டு இருக்கின்றது என்று கூறி கழுதைப் பாலை குடிக்க வைப்பது தமிழக கிராம மக்களின் பழக்கமாகும். பெரியவர்களுக்கு ஏற்படும் நோய்கள், மனப்பிரச்னைகள், உடல் பிரச்னைகள் போன்றவற்றிற்கு செவ்வாய் கிரகத்தின் தீய விளைவுகள்தான் காரணம் எனக் கூறி செவ்வாய் தோஷத்தை அகற்ற நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று அங்கு அங்காரக பகவான் எனும் செவ்வாய் கிரகத்தை வணங்கி அதன் அருகில் இருக்கின்ற கருங்காலி மரத்தைக் கட்டிப்பிடித்து செவ்வாய் தோஷத்தை நீக்கச் செய்வார்கள். இது இந்து சமுதாய மக்களிடம் காணப்படும் பழக்கமாகும். ஒன்பது கிரகங்களில் செவ்வாய் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் மனிதனுக்கு நன்மையையும், இதன் தீய கதிர் வீச்சுக்கள் நோய்களையும் உண்டாக்குகிறது. முக்கியமாக, செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு தலை உச்சி முதல் கழுத்து வரையிலும், கண் கோளாறுகள், கண் அழற்சி, வீக்கம், இரத்த வாந்தி, பசியின்மை, தொழுநோய், வெண்குஷ்டம், மூலம், சர்க்கரை நோய், குடல் புழுக்கள், உடல் பலவீனம் போன்ற நோய்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை. தாவரங்களுக்கும், கிரகங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சில தாவரங்கள் குறிப்பிட்ட கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு திளைத்து இருக்கும். அந்த தாவரங்கள் செவ்வாய் கிரகத்தின் தோஷங்களை அகற்றுகிறது. இவ்வகையில், கருங்காலி இனத்தைச் சேர்ந்த முள் மரங்கள் செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு சிறந்த மருந்து என வானவியல் சாஸ்திர நூல்களில் கூறப்பட்டு இருக்கிறது. அதனால்தான், அம்மரங்களை செவ்வாய் கிரகக் கோவில்களில் நட்டு வளர்ப்பது வழக்கம். கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் நோய்களுக்கு இரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும்தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. அந்த நோய்கள் செவ்வாய்க்கிரகம் மூலம் தான் ஏற்படுகிறது. இம்மரத்தின் அடித்தண்டு, வேர்ப்பட்டை, பூக்கள், பிசின் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் மரப்பட்டையை மன நோய், கண் நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகத் தருவார்கள். மரத்தூள் ஜூரம், பேதி, வயிற்று நாக்குப்பூச்சி, வலி, வீக்கம், வெண்குஷ்டம், குஷ்டம், நோய் அரிப்பு, அழுகிய புண், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணமாக்குகின்றது. சீமைக் காசிக்கட்டி எனும் இதன் பிசினை வெற்றிலை பாக்கில் வைத்து சிலர் சாப்பிடுவார்கள். இதனால் பற்களில் இரத்தக் கசிவு மற்றும் ஈறுகளில் உணர்வற்ற நிலையைப் போக்குகிறது. வாய்ப்புண்ணைக் குணமாக்குகிறது. கருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மரமும், மருந்துமாகும். இந்தக் காலங்களில் செவ்வாய்க் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் அதிகளவில் வெளியேறுகின்றன. அதனால்தான் செவ்வாய்கிரகம் வலிமையாகக் காணப்படும் நாளுக்கு செவ்வாய்க்கிழமை என்றும் அழைப்பார்கள். மேற்கண்ட நோய்கள் நீங்க கருங்காலி மரத்தை அரை மணி நேரம் கட்டிப் பிடிக்கலாம். இதனால் மரத்தின் மருத்துவ குணங்கள் நம் உடலில் மாற்றலாகி நோய்கள் குணம் பெறுகின்றன என்று "ரெய்கி' மருத்துவம் கூறுகிறது. மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம். இந்த மரங்களை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள நலம் தரும் வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.


நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 10: வன்னி மரம்
டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்


ஒருவருக்கு அடிக்கடி துன்பங்களும், வேதனைகளும் உடல் நிலையும் பாதிக்கப்படும் போது அல்லது கெட்ட காலம் இருக்கும்போது "எனக்குப் பிடித்த சனி எப்போதுதான் போகுமோ' என்பார்கள். ஒன்பது கிரகங்களில் சனி கிரகம் (saturn) மிகவும் சக்தி வாய்ந்தது. இது முழங்கால் மூட்டுகள் உள்ள பகுதியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. சனிக்கிழமை என்ற வார்த்தை சனி கிரகத்தைத்தான் குறிக்கின்றது. சனிக்கிழமையன்று சனி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதனால்தான் அந்நாளுக்கு Saturn+day=Saturday என்று அழைக்கப்படுகிறது. மூட்டுவாதம், ஆஸ்துமா, மூலம் போன்ற நோய்கள் சனி கிரகத்தால்தான் ஏற்படுகின்றது. இந்து சமுதாய மக்களில் சிலர் கஷ்டமான காலகட்டத்தில் சனி தோஷத்தை நீக்கிக் கொள்ள நவக்கிரக கோயிலில் உள்ள சனி விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள வன்னி மரத்தையும் தொட்டுக் கும்பிட்டு அதைச் சுற்றி வருவார்கள். இதனால் சனி தோஷம் நீங்கிவிடுவதாக நம்பப்படுகிறது. உண்மையில் வன்னிமரம் சனி கிரகத்துடன் தொடர்பு கொண்ட மரமாகும். இந்த மரம் சனி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை சுவாசித்து தன் உடலில் நிரப்பிக் கொள்கிறது. அதுதான் மருத்துவ குணங்களாக மாறுகின்றன. இந்த மரம் சனிகிரகத்தினால் உண்டாகும் நோய்களைக் குணமாக்குவதுடன் நோய்கள் வராமலும் தடுக்கின்றது. சனி தோஷம் நீங்க வன்னி மரத்தைத் தினசரி அரை மணி நேரம் கட்டிப் பிடித்தால் போதும். சனி தோஷம் நீங்கும். சனி கிரகத்தின் தீய விளைவுகளும் நீங்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது. இதனால்தான் யுனானி மருத்துவர்கள் வன்னி மரத்தை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். மருத்துவக் குணங்கள் : காய்: வன்னிக் காய் பெண்களின் அதிகமான மாதவிலக்கு, இரத்தப்போக்கைத் தடுக்கச் சிறந்த மருந்தாகும். இதனைப் பவுடராக்கி 5 கிராம் முதல் 7 கிராம் வரை மருந்தாகத் தரலாம். இந்தப் பவுடரைத் தேவைப்படும்போது சாப்பிட்டால் சீதபேதி, மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், இரத்த வாந்தி, சளியில் ரத்தம் கலந்து வரும் நோய்கள் கட்டுப்படும். வன்னிக்காயைத் தண்ணீரில் கொதிக்க வைக்கலாம். அந்நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் ஈறுகள், பற்கள், வாய், நாக்கின் ரணம், வலி, வீக்கம் போன்றவை குணம் பெறும். இலை:வன்னி மரத்தின் இலைகளைக் கஷாயமிட்டு வாய் கொப்பளித்தால் பல் வலி நீங்கும். மரம்: இதன் மரத்தை எரித்துவரும் சாம்பலைக் கொண்டு பல்துலக்கினால் பற்கள் வலுப்பெறும். தயாரிக்கப்பட்ட மருந்துகள் : வன்னி மரத்தைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள். குறிப்பாக ஹப்பே பேசிஷ், சஃபூப் கலான், சஃபூப்சீலானுல் ரஹம், சஃபூப் கஜ்வாலா, சஃபூப் பாஸ், ஜரூர் முஜஃபஃப், தவாயே காகரா, தவாயே காஸ், மாஜுன் ஸôலப், மாஜுன் ஜாலிநியுஸ், மாஜுன் சோப்சீனி பனுஸ்கா கலான் போன்ற பலவகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதை மருத்துவர்களின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். பொதுவாக மகரம், கும்பம் ராசி கொண்டவர்களுக்கும், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரை மற்றும் சனிக்கிழமை பிறந்தவர்களுக்கும் உண்டாகும் நோய்களுக்கு சனிகிரகம்தான் காரணம் என வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது. அவர்கள் வன்னிமரத்தை வீட்டிலோ, தோட்டத்திலோ வளர்க்கலாம். அதனைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளை மூலிகை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இந்த மரத்தை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.

நன்றி தினமணி கதிர்

No comments: